திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.87 திருநள்ளாறு - திருவிராகம் பண் - சாதாரி |
தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தம் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
|
1 |
போதமர் தருபுரி குழலெழில் மலைமகள் பூணணி
சீதம தணிதரு முகிழிள வனமுலை செறிதலின்
நாதம தெழிலுரு வனையநள் ளாறர்தந் நாமமே
மீமத தெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
|
2 |
இட்டுறு மணியணி யிணர்புணர் வளரொளி யெழில்வடங்
கட்டுறு கதிரிள வனமுலை யிணையொடு கலவலின்
நட்டுறு செறிவயல் மருவுநள் ளாறர்தந் நாமமே
இட்டுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
|
3 |
மைச்சணி வரியரி நயனிதொன் மலைமகள் பயனுறு
கச்சணி கதிரிள வனமுலை யவையொடு கலவலின்
நச்சணி மிடறுடை யடிகள்நள் ளாறர்தந் நாமமே
மெச்சணி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
|
4 |
பண்ணியல் மலைமகள் கதிர்விடு பருமணி யணிநிறக்
கண்ணியல் கலசம தனமுலை யிணையொடு கலவலின்
நண்ணிய குளிர்புனல் புகுதுநள் ளாறர்தந் நாமமே
விண்ணிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
|
5 |
போதுறு புரிகுழல் மலைமகள் இளவளர் பொன்னணி
சூதுறு தளிர்நிற வனமுலை யவையொடு துதைதலின்
தாதுறு நிறமுடை யடிகள்நள் ளாறர்தந் நாமமே
மீதுறு மெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
|
6 |
கார்மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள் ளாறர்தந் நாமமே
ஏர்மலி யெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
|
7 |
மன்னிய வளரொளி மலைமகள் தளிர்நிற மதமிகு
பொன்னியல் மணியணி கலசம தனமுலை புணர்தலின்
தன்னியல் தசமுகன் நெறியநள் ளாறர்தந் நாமமே
மின்னிய லெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
|
8 |
கான்முக மயிலியல் மலைமகள் கதிர்விடு கனமிகு
பான்முக மியல்பணை யிணைமுலை துணையொடு பயிறலின்
நான்முகன் அரியறி வரியநள் ளாறர்தந் நாமமே
மேன்முக வெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
|
9 |
அத்திர நயனிதொன் மலைமகள் பயனுறு மதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை யிணையொடு செறிதலின்
புத்தரொ டமணர்பொய் பெயருநள் ளாறர்தந் நாமமே
மெய்த்திர ளெரியினி லிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
|
10 |
சிற்றிடை அரிவைதன் வனமுலை யிணையொடு செறிதரும்
நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவன் எதிரிடை யெரியிணி லிடஇவை கூறிய
சொற்றெரி யொருபதும் அறிபவர் துயரிலர் தூயரே.
|
11 |
இது சமணர் வாதின்பொருட்டுத் தீயிலிடுதற்கு இப்பதிகம் தீயில் பழுதுபடாது என்னுந் துணிவு கொண்டு அருளிச் செய்தது. |
திருச்சிற்றம்பலம் |